நாளையும் தொடரும் கோர்ட் புறக்கணிப்பு; ஐகோர்ட் வக்கீல் சங்கம் தீர்மானம்
சென்னை: தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச உதவிகளை தடை செய்ய கோரியும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்கம் நடத்தும் தனது போராட்டத்தை நாளையும் தொடர போவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு சர்வதேச உதவிகளை தடை செய்ய கோரியும், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் சென்னை ஐகோர்ட் வக்கீல் சங்கம் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்த போவதாக கடந்த 29ம் தேதி அறிவித்தது.
நேற்று இரண்டாவது நாளாக கோர்ட் புறக்கணிப்பு நடந்தது. இதனால் நேற்றும் சென்னையில் கோர்ட்டுகள் செயல்படவில்லை.
இந்த சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் தலைமையில் வக்கீல்கள் சங்கம் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில், வரும் 4ம் தேதி முடிய தொடர்ந்து கோர்ட்டுகளை புறக்கணிக்கப்படும். போராட்டம் தொடர்பாக பல வக்கீல்கள் மீது பொய்யான வழக்குகள் போடுவதாகவும், இது கண்டிக்கத்தக்கது. மீண்டும் 5ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடி போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வக்கீல் சங்க தலைவர்களை அழைத்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டுமென்றும், பொதுமக்கள் நலன் கருதி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை விரைவில் விட்டுவிட்டு விட வேண்டும் என்று ஐகோர்ட்டு கேட்டுக்கொண்டுள்ளது.
சட்ட மாணவர்கள் 17 பேர் கைது
சென்னை சட்டக்கல்லூரி முக்கிய நுழைவாயில் முன்பு சட்டக்கல்லூரி மாணவர் 17 பேரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில், தமிழர்கள் படுகொலையை செய்யப்பட்டதை கண்டித்து ஐகோர்ட்டு வளாகத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருக்கும் வக்கீல்கள் 50 பேருக்கு மேல் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். தினமும் உண்ணாவிரதம் இருக்கவும் இக்குழு முடிவு எடுத்துள்ளது. இந்த குழுவிற்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் கோர்ட்டு வக்கீல்கள் கோர்ட்டு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சேயின் கொடும்பாவி தீவைத்து கொளுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டு வக்கீல்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
நெல்லையில் வக்கீல்கள் ரயில் மறியல்
இலங்கை தமிழர்களை காப்பாற்ற கோரியும், போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். நெல்லையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 69 வக்கீல்களை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை கோர்ட்டு முன்பு இருந்து காலை 11 மணிக்கு வக்கீல்கள் 2 பஸ்களில் புறப்பட்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அங்கு தண்டவாளத்தில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர். இதில் ஈடுபட்ட பா.ம.க. துணைபொதுச்செயலாளர் வக்கீல் மோகன்ராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பிரபாகரன் உள்ளிட்ட 69 வக்கீல்களை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் நேற்று காலை வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து விட்டு மொத்தமாக வெளியேறினர். அவர்கள் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீ வைத்தனர்.
தூத்துக்குடி வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கோர்ட்டு முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
சோனியா உருவ பொம்மை எரிப்பு
கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு நுழைவு வாயில் முன் நின்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உருவப்பொம்மையை தீவைத்து கொழுத்தினார்கள். அதை போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதற்குள் உருவப்பொம்மை எரிந்து சாம்பலானது.
திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களின் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சுமார் 15 பேர் நேற்று காலை திருச்சி விமானநிலையம் அருகே திரண்டு இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பின்னர் அவர்கள் டிவிஎஸ் சுங்கசாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியல் செய்யவும் முயன்றனர். இதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், அங்கு உடனடி போர்நிறுத்தம் செய்ய மத்திய, மாநில அரசுகள் தலையிட வலியுறுத்தியும் விருத்தாசலத்தை அடுத்த விஜயமாநகர கிராம மக்கள் நேற்று காலை 8 மணி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள்.
உண்ணாவிரதம் வாபஸ்
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி காந்தி கிராம பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.உண்ணாவிரதம் இருந்த மாணவர்களிடம், பதிவாளர் சுந்தர வடிவேலு, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவித்த பின்னர், வளாகத்தில் உண்ணாவிரதம் இருப்பது சட்ட விரோதமானது.
எனவே உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார். இதைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை மாணவ, மாணவிகள் முடித்துக்கொண்டனர்.
கறுப்பு பட்டையுடன் டாக்டர்கள் போராட்டம்
இதற்கிடையே, நாளை சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க உறுப்பினர்கள் கறுப்பு பட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிகாட்ட போவதாக தெரிவித்துள்ளனர்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,
மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படும் இலங்கை அரசைக் கண்டித்தும், போரை நிறுத்திட உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், இலங்கைப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் அமைதி வழியில் அரசியல் தீர்வு காண ஐ.நா உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை நடக்கும் முழு அடைப்புக்கு வரவேற்பு அளிக்கிறோம்.
சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க உறுப்பினர்கள் நாளை கறுப்பு பட்டை அணிந்து பணிக்குச் செல்லும் போராட்டம் நடத்த உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications