இலங்கை பிரச்சினையில் தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: வரதராஜன்
மதுரை:இலங்கை தமிழர்களை காக்கும் முயற்சியில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பிரகாஷ் காரத் நேற்று மதுரை வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் காரத் பேசினார்.
அப்போது அவருடன் இருந்த வரதராஜன் கூறுகையில்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் துயரம் தீர்க்கப்பட வேண்டும். இலங்கை பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படவேண்டும். நாளை அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தம் எந்த அளவிற்கு இலங்கை தமிழர்களுக்கு உதவும் என்று தெரியவில்லை.
முல்லைத்தீவு வரை ராஜபக்சேவின் ராணுவப்படை சென்றுள்ளது. இந்த பிரச்சினையில் ராஜதந்திரத்துடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
திமுகவுடன் முன்பு தொகுதி உடன்பாடு கொண்டிருந்தோம். இப்போது அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு கொண்டிருக்கிறோம்.
உலக மயமாக்கல் காரணமாக கரூர், திருப்பூர், மதுரை என பல நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கச்சா எண்ணை விலை குறைந்த அளவுக்கு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பதற்காக அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதற்காக மார்ச் இரண்டாவது வாரத்தில் மக்கள் இயக்கம் நடத்த உள்ளோம் என்றார் வரதராஜன்.
முன்னதாக காரத் கூறுகையில், இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டு்ம். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு முழு சுயாட்சி வழங்க வேண்டும். இலங்கை அரசு, அரசியல் ரீதியான தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றார்.