கரூர் தபால் அலுவலகத்தில் ரூ 82 ஆயிரம் கையாடல்; ஊழியருக்கு போலீசார் வலை !
கரூர்: கரூர் தபால் அலுவலகத்தில் ரூ 82 ஆயிரம் கையாடல் செய்த ஊழியரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கரூர் செங்குந்தபுரத்தில் ஊரக தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் அலுவலகத்தில் தபால் உயர் அதிகாரிகள் குழு திடீர் தணிக்கை செய்தனர். அப்போது கணக்கு வழக்குகளில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்தது.
இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் முனியப்பன் கடந்த 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி முதல் டிசம்பர் 22 ம் தேதி வரை உள்ள காலத்தில் பொது மக்களின் சேமிப்பு பணத்தை போலி கையெழுத்திட்டு ரூ 82 ஆயிரத்து 740 கையாடல் செய்து இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
இதனையடுத்து, தபால்துறை கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் அழகு பாண்டியன் பொது மக்கள் பணத்தை போலி கையெழுத்திட்டு கையாடல் செய்த முனியப்பன் மீது கரூர் நகர குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையறிந்த முனியப்பன் திடீரென தலைமறைவாகிவிட்டார்.
புகாரின் பேரில் போலீசார் முனியப்பன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்