சென்னைக்குப் பயிற்சிக்கு வந்த சிங்கள விமான படையினர்

இலங்கையில் போர் உக்கிரமடைந்துள்ளது. தமிழர்களைக் குறி வைத்து இலங்கை படைகள் கடும் வேகத்தில் தாக்கி வருகின்றன.
விமானப்படை விமானங்கள் அப்பாவித் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய விமானப்படை அதிகாரிகள், சிங்கள விமானப்படையினருக்கு பயிற்சி தருகிறார்கள். அதிலும் சென்னையில் வைத்து இந்தப் பயிற்சி நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமே இலங்கை அரசுக்கு எதிராக கொந்தளித்துப் போயுள்ள நிலையில், சிங்களப் படையினருக்கு தமிழகத்தின் தலைநகரில் வைத்து தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தம் 8 சிங்கள வீரர்கள் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளனர். இவர்களுக்கு 3 மாத பயிற்சி தரப்படும் எனத் தெரிகிறது.
இவர்கள் தங்களது காவல் நிலையத்தில் காட்டி பதிவு செய்வதற்காக நேற்று சேலையூர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடன் இந்திய விமானப்படை அதிகாரிகள் இருவரும் உடன் வந்தனர்.
சேலையூர் காவல் நிலையத்திற்கு இலங்கை விமானப்படையினர் வந்த தகவல் அறிந்ததும் அப்பகுதியில் மக்கள் கூடினர். செய்தியாளர்களும் விரைந்து வந்தனர்.
துப்பாக்கியால் மிரட்டினர்
இலங்கை விமானப்படை வீரர்கள், சீருடையுடன், கையில் துப்பாக்கியுடன் வந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியது.
அவர்களை சிலர் தங்களது செல்போனில் படம் பிடிக்க முயன்றுள்ளனர். அதைப் பார்த்த சிங்கள வீரர்கள் தங்களது கையில் இருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தமிழக கட்சிகள் கடுமையாக கூறி வரும் நிலையில், இன்று அதைக் கண்டித்து பந்த் நடைபெறவுள்ள நிலையில் சிங்களப் படையினர் தமிழகம் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications