தீவிரவாதிகளுடன் தொடர்பு? - ஸ்பெயினில் 4 இந்தியர்கள் கைது
பார்சிலோனா: தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நான்கு இந்தியர், ஒரு பாகிஸ்தானியர் உட்பட 15 பேரை நேற்று ஸ்பெயின் போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடந்த 2004ம் ஆண்டு பயணிகள் ரயிலில் குண்டு வெடித்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டதாக சந்தேகித்து மும்பையை சேர்ந்த ரோஷன் ஜமால் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 20ம் தேதி வரி ஏமாற்றம் செய்ததாகவும், தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் அனுப்பியதாகவும் 6 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது தீவிரவாதிகளுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக சந்தேகப்பட்டு 15 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் இந்தியர்கள், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். மற்ற 10 பேர் வடக்கு ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள்.
அவர்களிடம் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. ஆனால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பதற்கான பொருட்களும், அல் கொய்தா மற்றும் சில் தீவிரவாத இயக்கங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களும் இருந்ததாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications