பாக்.க்கு பதிலடி கொடுக்க இந்தியா ரெடி - சோனியா
சில்வாஸா: இந்தியாவைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.
தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேச பகுதியில் நேற்று நடந்த விழாவில் நை டாமன் மற்றும் மோடி டாமனை இணைக்கும் பாலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா திறந்து வைத்தார். இப்பாலத்துக்கு ராஜீவ்காந்தி சேது என பெயரிடப்பட்டுள்ளது.
அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவை பலவீனப்படுத்த நினைப்பவர்களின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது. பல்வேறு மதம் மற்றும் இனத்தைச் சேர்ந்தவர்கள் இணக்கமாக வாழும் நாடு என்பது இந்தியாவின் அடையாளம். இந்த அடையாளத்தை அழித்து ஒற்றுமையை குலைக்க அருகிலிருக்கும் சில நாடுகள் முயல்கின்றன.
நமது மத நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும, சீர்குலைக்க நடக்கும் முயற்சிகளை ஒருபோதும் வெற்றி பெறவிடமாட்டோம். அப்படி முயற்சிப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்.நாம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சவால்களில் தீவிரவாதமும் ஒன்று. இதை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்பதில எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
விவசாயிகளுக்கு ரூ. 71 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ராஜீவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஆகியவை எங்கள் கட்சியின் சாதனைகளில் சில.
அணுசக்தி உற்பத்தியைப் பெருக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த அரசின் மிகப் பெரிய சாதனை என்றார் சோனியா.