அரசியலுக்கு வந்தார் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். அவர் லோக் பாரதி என்னும் கட்சியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் காம்ப்ளி. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நெருங்கிய நண்பர். கடந்த 2000ம் ஆண்டுக்கு பின் இவருக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் ஓய்வை அறிவித்தார்.
தற்போது அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். அவர் மகாராஷ்டிராவை சேர்ந்த உள்ளூர் கட்சியான லோக் பாரதியில் இணைந்துள்ளார்.
அவர் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்,
மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் நான் உட்பட மும்பை மக்கள் அரசியலில் மாற்றம் வர வேண்டும் என விரும்புகிறோம். அதனால் அரசியலில் ஈடுபட முடிவு செய்தேன். சில கட்சிகளிலிருந்து முக்கிய பதவி தருகிறோம் வாருங்கள் என்றனர்.
ஆனால், நான் லோக் பாரதியில் இணைவதையே விரும்புகிறேன். அவர்கள் கல்வி குறித்த விழிப்புணர்ச்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார் காம்ப்ளி.