அரசு மிரட்டலைத் தாண்டி பந்த் முழு வெற்றி: நெடுமாறன், ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசின் பல வித மிரட்டல்களையும் தாண்டி பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது எனறு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பழ. நெடுமாறன் கூறுகையில், இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பிப்ரவரி 4-ம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியுடன் நடைபெற உதவிய வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் உரிமையாளர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசின் மிரட்டல், எச்சரிக்கை ஆகியவற்றையும் மீறி பொது வேலைநிறுத்தம் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும், வெற்றிகரமாகவும் நடந்துள்ளது. இது ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்தமான கொதிப்பின் வெளிப்பாடாகும்.

இந்த உண்மையை உணர்ந்து தமிழக அரசும், இந்திய அரசும் உடனடியாகச் செயல்பட்டு ஈழத் தமிழர்கள் படுகொலையைத் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், மக்கள் போராட்டங்கள் பெருமளவில் வெடிக்கும் என எச்சரிக்கிறேன் என்றார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவிக்கையில், பொது வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. எல்லா மாவட்டங்களிலும், எல்லா தரப்பு மக்களும் இப்போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அரசின் மிரட்டல் காரணமாக, போக்குவரத்து ஊழியர்களைக் கட்டாயப்படுத்தி, அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் அந்த பஸ்களில் பயணம் செய்யாமல் மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

போராட்டம் இத்துடன் முடிந்து விடவில்லை. இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு, அங்குள்ள தமிழர்கள் அனைத்து அதிகாரமும் பெற்று, சம உரிமையுடன் வாழும் நிலைமை ஏற்படுகிற வரையில் போராட்டம் தொடரும்.

புதன்கிழமை போராட்டத்தின்போது முழு அமைதி நிலவியதாக மாநில காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார். எனவே கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை தமிழர்களை காப்பாற்ற தமிழ்நாட்டில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வேலை நிறுத்தம் வரலாற்று சிறப்புமிக்கது.

தமிழகத்தின் கோடானுகோடி மக்கள் வேலை நிறுத்தத்தில் தாங்களாக ஈடுபட்டு வெற்றி பெற செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவிக்கையில், ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் மிரட்டியபோதும், ஆத்திரமடையாமல், கலவரத்திற்கு இடம் கொடாமல் தமிழ்நாட்டு மக்கள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி தமிழர்களுக்காக வேதனையை வெளிப்படுத்தும் வகையில் உறுதியுடன் நின்று, மத்திய அரசின் செயலற்ற தன்மையைக் கண்டித்து போராட்டத்தை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில்,

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழக அரசின் அச்சுறுத்தல்களைத் தாண்டி தமிழக மக்கள் சாதித்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். பொது வேலைநிறுத்தத்தை அரசியல் கட்சிகளுக்கு இடையிலான செல்வாக்கை நிலைநாட்டும் போட்டியாகக் கருதி போராட்டத்தை வலுவிழக்க அரசுத் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சி மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஒட்டுமொத்த தமிழினத்தையே இழிவுபடுத்தும் இந்திய அரசையும், சிங்கள அரசையும் கண்டிப்பதற்கான ஒரு அறவழிப்போர் என்கிற அடிப்படையில் ஆதரிக்கவில்லை என்றாலும் கூட எதிராகச் செயல்படாமல் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் ஆதரிக்காமலேயே இந்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து, போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+