கட்சித் தலைவர்களை தலைமைச் செயலாளர் மிரட்டுவதா வைகோ கண்டனம்
சென்னை: பந்த்தில் ஈடுபடக் கூடாது என தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி எச்சரிக்கை விடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளதா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த வக்கீல்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
பிப்ரவரி 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் வேலைநிறுத்தம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.
அன்றிரவு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் பொது வேலைநிறுத்தம் சட்ட விரோதம் என்று தெரிவித்துள்ளார். இது கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் இலங்கையில் இருதரப்பும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டறிக்கை விட்டுள்ளனர்.
கிறிஸ்தவ மதத் தலைவரான போப் 16-வது பெனடிக்ட் இன்று அதிகாலை இலங்கையில் இருதரப்பும் போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்தியா இந்த விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறது என்று கேள்வி கேட்கின்றனர்.
இந்திய அரசு இந்த விஷயத்தில் ஒப்புக்குக் கூட போர் நிறுத்தம் கோராதது ஏன்? இந்தியா போர் நிறுத்தம் கோரினால் பல உலக நாடுகளும் இலங்கையில் போர் நிறுத்தம் கோருவதற்குத் தயாராக உள்ளன.
இந்திய அரசை பணிய வைக்கும் போராட்டங்களில் நாம் இறங்க வேண்டும். பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள கருப்புக் கொடி ஊர்வலத்தில் வழக்கறிஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications