பென்ஷன் விவகாரம்: பதக்கங்களை திருப்பி கொடுக்க முன்னாள் ராணுவ வீரர்கள் முடிவு
டெல்லி: ஆறாவது ஊதியக் குழுவின் பென்ஷன் பரிந்துரையில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதை காரணம் காட்டி தங்களுக்கு வழங்கப்பட்ட வீர விருதுகள் பதக்கங்களை குடியரசுத் தலைவரிடமே திருப்பி தர முன்னாள் ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் பெருமளவில் கலந்து கொண்ட பேரணி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள், ஒரே வேலை, ஒரே ஊதியம் என்ற கோஷத்தை எழுப்பினர். மேலும், ஆறாவது ஊதியக் கமிஷன் பரிந்துரையில் தங்களுக்கு எந்த சாதக அம்சமும் இல்லை என்று குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து முன்னாள் படை வீரர்கள் கூறுகையில், வீரர்களுக்கு இடையே இருக்கும் பென்ஷன் வித்தியாசம் குறித்தும், ஆறாவது ஊதிய குழுவின் பரிந்துரை தொடர்பாகவும் மத்திய அரசு தனது முடிவை மறுபரீசிலனை செய்ய வேண்டும்.
ஆறாவது ஊதிய குழுவின் அறிக்கை படி, ராணுவத்தில் ஒரே பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இதன்படி 1996க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு பென்ஷனும், 1996 முதல் 2005 வரை பணிபுரிந்தவர்களுக்கு ஒரு பென்ஷனும், 2006 முதல் 2008 செப்டம்பரில் ஓய்வு பெற்றவர்களுக்கு தனி பென்ஷனும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு இவர்கள் அனைவரையும் விட அதிக பென்ஷனும் வருகிறது.
அப்படி பார்க்கையில் 1996ல் ஓய்வு பெற்ற ஹவில்தாரின் பென்ஷன் 2006ல் ஓய்வு பெற்ற சாதாரண சிப்பாயை விட குறைவாக இருக்கிறது.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆட்சிக்கு வரும் முன் எங்களின் முன்னேற்றத்துக்கு உதவுவதாக சொல்கிறார்கள். ஆனால் வந்தவுடன் கைவிட்டு விடுகின்றனர் என்றார்.
ஓய்வு பெற்ற கர்னல் கன்வர் பரத்வாஜ் என்பவர் கூறுகையில், எனது மகன் உமாங் பரத்வாஜ் கடந்த 2002ல் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு உயிர் துறந்தான். அவனுக்கு அளிக்கப்பட்ட சவுரிய சக்ரா விருது மற்றும் எனக்கு 1971ல் கொடுக்கப்பட்ட சேனா விருது இரண்டையும் ஜனாதிபதியை சந்தித்து திருப்பி கொடுக்க இருக்கிறேன்.
நாட்டை காக்கும் வீரர்களுக்கு அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் எங்களின் வாழ்க்கை தரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றனர் என்றார்.
முன்னாள் கடற்படை தலைவர் அட்மிரல் சுஷில் குமார் கூறுகையில், இந்தியாவின் தூண்களாக கருதப்படும் ராணுவ வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றார்.
முன்னாள் ராணுவ துணைத் தளபதி ராஜ் கட்யான் கூறுகையில், நான் பெற்றுள்ள பதக்கங்கள் எனக்கு மிகப்பெரிய கவுரவத்தை பெற்று தந்துள்ளன. ஆனால், எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை அவை ஜனாதிபதியிடம் இருப்பதே நல்லது என கருதுகிறேன் என்றார்.