லோக்சபா தேர்தல்: 3வது அணியில் இணைவோம் - சரத்குமார்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அமையும் 3வது அணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறும் என அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை, அம்பத்தூரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் எங்களிடம் பேசி வருகின்றன. ஆனால் மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய கட்சியுடன் தான் நாங்கள் கூட்டணி வைத்து கொள்வோம்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும். அதில் சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறும்.
திருமங்கலம் இடைத் தேர்தலி்ல் நாம் போட்டியிடுவதைத் தவிர்க்கலாம் என கட்சி நிர்வாகிகள் கூறினர். துணைத் தலைவர் ராதிகாவும் அதையே கூறினார். ஆனால், கப்பலை தயாரித்த பிறகு கரையிலேயே நிறுத்தி வைக்கக்கூடாது என்று போட்டியிட்டோம்.
இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
நான் 1996-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருந்து வருகிறேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் கூட ஆண்டவனே வந்தால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டு வெளிநாடு சென்று விட்டார். ஆனால் நான் ஒருவன் மட்டும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றி தேர்தல் பணியாற்றினேன்.
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் அதனை சமத்துவ மக்கள் கட்சி நிச்சயம் நிறைவேற்றும்.
பெருந்தலைவர் காமராஜருக்கு விருதுநகரில் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். இது எனது கனவு திட்டம்.
காமராஜர் ஆட்சி பற்றி நிறைய பேர் பேசுகிறார்கள். ஆனால் அது என்னவென்று சொல்ல மாட்டார்கள். 8 அமைச்சர்களை வைத்துக் கொண்டு ஒரு பொற்கால ஆட்சியை தந்தார்.
அவரது ஆட்சியின் சிறப்பை மக்களிடம் அரசியல்வாதிகள் மறைத்து விட்டார்கள். காமராஜரின் ஆட்சியின் சிறப்பு மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்வோம் என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications