மதுரையில் வக்கீல்கள்-காங். பயங்கர மோதல்: அடிதடி, கல்வீச்சு, கடையடைப்பு
மதுரை: மதுரையில் வக்கீல்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது பெரும் மோதல் மூண்டது. அவர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே ஏற்பட்ட பெரும் அடிதடியால் பல கடைகள் தாக்கப்பட்டன. கல்வீச்சும் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன. அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தினசரி ஆர்ப்பாட்டம், பேரணி உள்ளிட்டவற்றை அவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் காங்கிரஸாரையும் குறி வைத்து அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வக்கீல்கள் போராட்டம் நடத்துவதை கண்டித்தும், காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின் வீடு, அலுவலகங்கள் தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும் மதுரை மாவட்ட கோர்ட் முன்பு வக்கீல் பெருமாள் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்து கோர்ட்டு வளாகத்துக்குள் இருந்த வக்கீல்கள், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்களையும், காங்கிரசாரையும் அந்த இடத்தை விட்டு செல்லுமாறு எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக வெடித்தது.
இரு தரப்பினரும் போர்க்களத்தில் மோதுவது போல கைக்குக் கிடைத்த பொருட்களை எடுத்து வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர். கற்களாலும் சரமாரியாக வீசித் தாக்கிக் கொண்டனர்.
வக்கீல்கள், காங்கிரஸாரின் இந்த கல்வீச்சால் அந்தப் பகுதியில் இருந்த சில கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து கடைகள் அனைத்தும் வேகம் வேகமாக அடைக்கப்பட்டன.
அந்த இடமே ரகளைக் களமாக மாறிப் போனது. காங்கிரஸ் கொடிகளையும் சில வக்கீல்கள் தீவைத்துக் கொளுத்தினர். மோதல் வன்முறையாக மாறிய தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர்.
மோதலில் ஈடுபட்டிருந்த வக்கீல்களை பிரித்து சமரசப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதையடுத்தே அங்கு அமைதி திரும்பியது.












Click it and Unblock the Notifications