அகதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்து உதவுவோம்: விஜயகாந்த்
சென்னை: தேமுதிக கொடி நாளின்போது இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவ தாராளமாக அத்தியாவசியப் பொருட்களை கொடுத்து கட்சித் தொண்டர்கள் உதவ வேண்டும் என கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் 12-ந் தேதி வியாழக்கிழமை தே.மு.தி.க.வின் கொடி நாளாகும். அன்றைய தினம் கொடிகளை புதுப்பிப்பதும், புதிய இடங்களில் கொடியேற்றுவதும் நாம் வழக்கமாக கொண்டுள்ள நடைமுறையாகும்.
அதற்கேற்ப வருகிற 12-ம் தேதி தமிழ்நாடெங்கும் நமது கொடிகளே இல்லாத இடமில்லை என்று மாற்றாரும் வியக்கத்தக்க வகையில் பட்டிதொட்டியெங்கும் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் இல்லாத அளவு இன்று இலங்கையில் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கிருந்து பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகவும் வந்த வண்ணம் உள்ளனர்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற நம் கொள்கையின்படி, இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு செயல்வீரர்கள் வழங்கி இந்த நாளை சிறப்பிக்க வேண்டுகிறோம் என்று கோரியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications