சுபிக்ஷாவை சூறையாடிய ஊழியர்கள்!!
மும்பை: சம்பளம் தரக்கூட பணமில்லை என நிர்வாகம் கைவிரித்து விட்டதால் ஆத்திரப்பட்ட ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுபிக்ஷா சில்லறை விற்பனை நிறுவனத்தின் 600 கிளைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு கடைகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
நாடு முழுவதும் 1,600க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கும் சுபிக்ஷா நிறுவனத்துக்கு கடன் தர வங்கிகள் மறுத்துவிட்டதால் பெரும் நிதிச் சிக்கலுக்கு உள்ளாகிவிட்டதாகவும், இதனால் கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் தரக் கூட பணமின்றி பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் சுபிக்ஷா நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.
இந் நிறுவனத்தில் உள்ள 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் பற்றி உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சம்பளமின்றித் தவிக்கும் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர், தாங்கள் பணியாற்றிய கிளைகளைச் சூறையாடத் தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 600 கிளைகளில் இந்த சூறையாடல் நடந்துள்ளதாகவும், இருக்கிற சொத்துக்களை சேதமடையாமல் காக்க, பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுபிக்ஷா தரப்பில் கூறப்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், சுபிக்ஷா குடோன்கள் பலவற்றை சூறையாடியவர்களே, அவற்றைப் பாதுகாக்க பணியில் அமர்த்தப்பட்டு, சம்பளம் தரப்படாததால் வெறுத்துப் போனவர்கள்தானாம்.
'பணியாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், காவலுக்கு இருந்தவர்களே சுபிக்ஷாவின் பல கிளைகளைச் சூறையாடியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகளும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
சுபிக்ஷா பெரிய நிறுவனம். இப்போது நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. வங்கிகள் கைவிரித்துவிட்ட இந்த சூழ்நிலையில் கைகொடுக்க முதலீட்டாளர்களை வரவேற்கிறோம்' என்று கூறியுள்ளார் சுபிக்ஷா நிறுவனர்.