அமரேசன் உடல் அடக்கம்; தலைவர்கள் அஞ்சலி
ராயபுரம்: இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி தீக்குளித்த அமரேசனின் உடல் நேற்று சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவில் கோழி கறி கடை வைத்திருப்பவர் அமரேசன் (65). இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு சங்கர், வெங்கடேசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். மீரா, அருள்ஜோதி என்ற 2 மகள்களும் உள்ளனர்.
கடந்த 9ம் தேதி மாலை சுங்கச்சாவடி பஸ் நிலையம் எதிரில் அமரேசன் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியில் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து இரவு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொது செயலர் வைகோ ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை தமிழர்களின் நலனை காக்க தீக்குளித்ததை அடுத்து அவரது இறுதி சடங்குகளுக்கான பொறுப்பை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் நேற்று காலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அமரேசனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மூன்று லட்சம் ரூபாய் நிதி
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உயிர் நீத்த தியாகி அமரேசனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என்று நெடுமாறன் கூறினார்.
மாலை 5 மணி அளவில் அமரேசனின் உடல் மூலகொத்தளம் சுடுகாட்டுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வீரவணக்கம் செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அமரேசனின் இறுதி ஊர்வலத்தை அடுத்து அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.