தைப்பூசம்-செங்கோட்டையில் ஆடல், பாடலுக்கு தடை
செங்கோட்டை: செங்கோட்டை அருகை தைப்பூச விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடல், பாடல் நிகழ்ச்சியை போலீசார் தடை செய்தனர். போலீசாரிடம் முன் அனுமதி பெறாததே இதற்கு காரணம் என தெரிகிறது.
செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவில் பிரசித்த பெற்ற மலைகோயிலாகும். அருணகிரி நாதரால் பாடப்பெற்ற இக்கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையாக புகழ்பெற்றதாகும்.
இக்கோயில் தைப்பூச திருவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. 10ம் நாளான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. இரவு 9 மணிக்கு ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகள் நடப்பதாக இருந்தது. நேற்று மண்டகபடிதாரர்களான குடியிருப்பை சேர்ந்த தேவர் சமுதாயத்தினர் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அத்துடன் இரவு 11 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் உலா வருவதற்காக சப்பரத்தில் திருமலைகுமாரசாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வீதி உலாவை எதிர்பார்த்து ஆண்களும், பெண்களும் காத்திருந்தனர்.
இந்நிலையில் தென்காசி டிஎஸ்பி மயில்வாகணன் தலைமையில் ஏராளமான போலீசார் கலைநிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று போலீசின் முன் அனுமதி பெறாததால் கலைநிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து டிஎஸ்பி மயில்வாகணன் தொடர்நது நிகழ்ச்சியை நடத்தினால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வேன் என்று எச்சரித்தார். இதையடுத்து கோபமடைந்த பொதுமக்கள் அந்த சப்பர நிகழ்ச்சியையும் புறக்கணித்து விட்டு கோயிலை விட்டு வெளியேறினர்.
சப்பர எழுநதருளல் நிகழ்ச்சி நடக்காததால் பக்தர்கள் வேதனை அடைந்ததோடு சிறிய விசயத்தை பூதகரமாக மாற்றிய டிஎஸ்பி மீது வருத்தப்பட்டனர். இதுகுறித்து தகவல் செங்கோட்டை தாசில்தார் ரவிசங்கருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சாமாதனப்படுத்த முயன்றார். ஆனால் ஆர்டிஓ வந்தால்தான் பேசுவோம் என்று மண்டகப்படிதாரர்கள் கூறினர்.
இதையடுத்து ஆர்டிஓ சண்முகமும் சம்பவ இடத்திற்கு வந்து ஊர் நாட்டாண்மைகள் சுப்பையா, வேல்சாமி சண்முகவேலு, ராமநாதன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் முதலில் கோயில் காரியங்கள் நடக்கட்டும். திருவிழா முடிந்ததும் பேசிக் கொள்ளலாம் என சாமதானப்படுத்தினார். இதையடுத்து நேற்றிரவு 11 மணிக்கு நடைபெற வேண்டிய சுவாமி எழுந்தருளல் இன்று காலை 8 மணிக்கு நடந்தது.












Click it and Unblock the Notifications