ஆர்எஸ்எஸ் ஊர்வலம்-வீடியோ எடுத்தவர் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்திய பேரணியை தனது மொபைலில் படம் எடுத்தவர் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்ட ஆர்எஸ்எஸ் சார்பில் தேசிய சுய பாதுகாப்பு அணிவகுப்பு ஊர்வலம் நாகர்கோவிலில் நடந்தது. வடசேரி வாஞ்சி ஆதித்தன் தெருவில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலம் அண்ணா ஸ்டேடியம் ரோடு, மணிமேடை, மீனாட்சிபுரம், கோட்டார் காவல்நிலையம் வழியாக டிவிடி பள்ளியை அடைந்தது.
அப்போது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை செல்போனில் வாலிபர் ஒருவர் படம் பிடித்துக் கொண்டே வந்தார். டிவிடி பள்ளிக்குள் ஊர்லவம் நுழைந்ததும் அவரும் நுழைந்து படம் பிடித்தார்.
இதையடுத்து அவரை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பிடித்தனர். எனவே கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அவரிடம் கோட்டார் போலீஸ் நிலையத்தில் டிஎஸ்பி சந்திரபால் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவரது பெயர் ஜாபர் சாதிக் என்பதும் வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவரது செல்போனை சோதித்த பார்த்தபோது ஊர்வலம் நிகழ்ச்சிகள் தொடங்கியதில் இருந்து படம் பிடித்து இருந்தது தெரிய வந்தது. முஸ்லிம் அமைப்பை சேர்ந்த இவர் ஏன் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை படம் பிடித்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.