இன்று முதல் பிளஸ் 2 தனித்தேர்வர் ஹால் டிக்கெட் விநியோகம்
சென்னை: இன்று முதல் பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வழங்கப்படும் என தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் பிளஸ் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு இன்று மதியத்துக்கு மேல் ஹால் டிக்கெட் வழங்கப்பட இருக்கிறது.
தனித்தேர்வர்கள் தங்களுக்கு அருகில் இருக்கும் தேர்வு மையத்துக்கு சென்று ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறி்த்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
ஹால் டிக்கெட்டை பெற்று கொண்டதும், அதில் தங்களது பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்வு மையம் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ளும்படி மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அதில் ஏதேனும் தவறு இருக்கும்பட்சத்தில் கூடுதல் செயலர், அரசு தேர்வுகள் இயக்கம், சென்னை-6 என்ற முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
முதன்முறையாக விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் கேட்டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வுகளை கண்டிப்பாக அணுக வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக எழுத்துத்தேர்வையும் எழுதவேண்டும். செய்முறை தேர்விலும் கலந்து கொள்ளவேண்டும்.
சென்னையில் உள்ள அனைத்து கல்வி மாவட்ட மாணவர்களும் அண்ணாசாலையில் உள்ள மதரஸா அஸாம் மேல்நிலைப்பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் உள்ளவர்கள் செங்கல்பட்டு செயிண்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சீபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ளவர்கள் காஞ்சீபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியிலும், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளூரில் உள்ள டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார் வசந்தி ஜீவானந்தம்.