இலங்கைத் தமிழர் நலனுக்கான துணை அமைப்பு இன்று ஆலோசனை
சென்னை: இலங்கைத் தமிழர்கள் உரிமைகளைப் பெற உலக அளவில் ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள துணை அமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று அக்குழுவின் தலைவர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிறது.
இலங்கைத் தமிழர்கள் நலன்கள், உரிமைகளைப் பெற போராட திமுக தலைமையில், இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் 3 நாள் பேரணிகள், கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த அமைப்புக்கு துணை அமைப்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஒரு அமைப்பை அரசு அறிவித்தது.
உலக நாடுகளின் ஆதரவைப் பெற இந்த அமைப்பு முனையும். இந்த அமைப்பில் கனிமொழி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த துணை அமைப்பின் முதல் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தியாகராய நகர், அக்கார்டு மெட்ரோபாலிட்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது.
அமைப்பின் அமைப்பாளர் அமைச்சர் துரைமுருகன், செயலாளர்கள் கி.வீரமணி, மத்திய மந்திரி ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் உறுப்பினர்களான முன்னாள் நீதிபதிகள் மோகன், பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், பாஸ்கரன், ஏ.கே.ராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை, சண்முகம், பேராசிரியர் ஆர்.வி.தனபாலன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவேண்டும்; அங்கு சிங்களருக்கு இணையான சமஉரிமையும், அதிகார பகிர்வும் தமிழ் இனம் பெற்றிட வேண்டும்; தமிழ் இன மக்களும், சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்கங்கள் நிறைவேறிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விவாதங்கள் நடைபெறும்.
உலகில் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள, மனிதநேயத்தை அடிப்படையாக கொண்ட அமைப்புகள், இனவெறி படுகொலையை கண்டிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளோடு தொடர்பு கொண்டு அவர்களிடத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையை எடுத்துச் செல்வதும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் முக்கிய பொருளாக இருக்கும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications