கசக்கும் சர்க்கரை!
சென்னை: இன்னும் சில தினங்களில் இந்த வசனம்தான் பல வீடுகளில் ஒலிக்கப்போகிறதோ என்னமோ...
நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் விலை குறையத் தொடங்கியுள்ளன. பணவீக்கம் கட்டுக்குள் வந்துவிட்டது. ஆனால் எந்தப் பொருளுக்கும் விலை குறைவதாய்க் காணோம். கேட்டால் இதுவரை மக்களுக்குத் தெரியாத புதிய பொருளாதார விதிகளை கண்டுபிடித்து விளக்கம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
கண்ணுக்குத் தெரிந்து இருமடங்கு விலைக்கு விற்கப்படும் அன்றாட உபயோகப் பொருள் வெங்காயம். நான்கு தினங்களுக்கு முன்பு வரை கிலோ 11 ரூபாயாக இருந்தது ரூ.20யைத் தாண்டிவிட்டது.
அடுத்து சர்க்கரையின் விலை மூட்டைக்கு ரூ.400 வரை உயர்ந்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்பு வரை 100 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சர்க்கரையின் விலை 1,850 ரூபாயாக இருந்தது. தற்போது, 2,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சில்லரை வியாபாரிகள் 16 முதல் 18 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ சர்க்கரையை, 23 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். பிராண்டட் சர்க்கரைக்கு ரூ.26 வரை விலை வைத்துள்ளனர்.
மழை தவறிப்போய் கரும்பு விளைச்சல் இல்லாததால் நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துவிட்டதாகவும், அதனால்தான் இவ்வளவு விலை உயர்வு ஏற்பட்டுவிட்டதென்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளது இப்படி:
'விரைவில் அமைச்சரவை கூடி, நாட்டின் விலைவாசி மாறுபாடுகள் குறித்து விவாதித்து இறுதி முடிவெடுக்கும்!'