பெரியாறு அணை: புதிய நிபுணர் குழு-உச்ச நீதிமன்றம் யோசனை
இது குறித்து வியாழக்கிழமை (இன்று) பதில் தாக்கல் செய்யுமாறு இரு மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று, உயரத்தை அதிகரிக்குமாறு கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை மதிக்காத கேரளம் உச்ச நீதிமன்ற உத்தரவை மீற புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதிகள் அரிஜித் பசாயத், ஜெயின், முகுந்தம் சர்மா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கேரளத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில்,
டெல்லியைச் சேர்ந்த ஐஐடி பேராசிரியர்கள் குழு அணையை ஆய்வு செய்து, அதன் உயரத்தை 136 அடிக்கு மேல் உயர்த்தினால் அணை உடைந்துவிடும் என்று கூறியுள்ளனர் என்றார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வினோத் பாப்டே, மத்திய நீர்வளத்துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் குழு அணையை முழுவதுமாக ஆய்வு செய்து உயரத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்றும், அணை பலமாகவே உள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்றுத்தான் உயரத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என்று 2006ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் கேரள அரசு சட்டமன்றத்தில் ஒரு தனி சட்டத்தை இயற்றி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக நடந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்காமல் இருக்க கேரளா கொண்டு வந்த இந்த தனிச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு முரணானது, சட்ட விரோதமானது. எனவே அந்த சட்டத் திருத்தம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்க கர்நாடக அரசு தனிச் சட்டம் இயற்றியபோது அதை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்தது. அதே நடைமுறையை இதிலும் பின்பற்ற வேண்டும்.
மேலும் கேரளம் தானாகவே ஒரு குழுவை அமைத்துக் கொண்டு தனக்கு சாதகமான ஒரு அறிக்கையை தயார் செய்து பெற்றுக் கொண்டு, கேரளம் வாதாடுகிறது என்றார்.
அப்போது கேரள வழக்கறிஞரை நோக்கி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அணையின் மட்டம் 136 அடியாக இருக்கும்போது மழை பெய்தால் என்ன ஆகும்? அணை உடைந்துவிடுமா?. உங்கள் தரப்பின் நிலை முரண்பாடாக உள்ளதே. நீங்கள் ஏன் மத்திய நீர்வளத்துறையை அணுகக் கூடாது என்றனர்.
ஆனால், இதற்கு பதிலளித்த ஹரீஷ் சால்வே, நீர் வளத்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.
இதையடுத்துப் பேசிய நீதிபதிகள், டெல்லி பேராசிரியர் குழு சொல்வது சரியா அல்லது மத்திய நீர் வளத்துறை சொல்வது சரியா என்று ஆய்வு செய்து அறிக்கை தர புதிதாக ஒரு நிபுணர் குழுவை நியமி்க்கலாமா கேட்ட நீதிபதிகள், இது குறித்து வியாழக்கிழமை (இன்று) பதில் தாக்கல் செய்யுமாறு இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.