நிதாரி கொடூரக் கொலைகள் - மணீந்தர் சிங் பந்தர், கோலி குற்றவாளி
கடந்த 2005ம் ஆண்டின் இறுதியில் நொய்டாவை மட்டுமல்லாது இந்தியாவையே அலற வைத்த சம்பவம் நிதாரி கொலைகள்.
நிதாரி கிராமத்தைச் சேர்ந்த மணீந்தர் சிங் பந்தரின் வீட்டுக்கு அருகே உள்ள கால்வாயிலிருந்து ஏராளமான மனித எலும்புகள் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார் கால்வாயைத் தோண்டிப் பார்த்தபோது எலும்புகள் வரிசையாக கிடைத்தன.
குவியல் குவியலாக கிடைத்த எலும்புகளால் பெரும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. மொத்தம் 19 இளம் சிறார்கள், ஒரு பெண்ணின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து மணீந்தர் சிங் பந்தர் மற்றும் அவரது வேலையாள் சுரீந்தர் கோலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் இருவர் மீதான கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.
நாளை இவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.