கன்னியாகுமரிக் கடலில் மர்மக் கப்பல் - பீதி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று பிற்பகலுக்கு மேல் மிகப் பெரிய கப்பல் ஒன்று சென்றுள்ளது. அந்தக் கப்பல் படு வித்தியாசமாக இருந்ததால் சுற்றுலாப் பயணிகளிடையே குழப்பமும், மர்மக் கப்பலால் அங்கு பீதியும் ஏற்பட்டது.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.
நேற்று பகல் 12 மணிக்கு பெரிய கப்பல் ஒன்று கடல் பகுதியில் காணப்பட்டது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ஆகியவற்றின் பின்பகுதியில் சுமார் 30 கடல் மைல்களுக்கு அப்பால் அந்த கப்பல் சென்றது.
கப்பலில் 3 பெரிய கோபுரங்கள் காணப்பட்டன. ஏதோ மூன்று பெரிய சிலைகள் கடலில் மிதப்பது போல அது தெரிந்தது.
வழக்கமான கப்பல்களைப் போல இல்லாமல், படு வித்தியாசமாக இருந்த இந்த கப்பலைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். தங்களிடம் உள்ள செல்போன்கள், கேமராக்கள் மூலம் அவற்றை புகைப்படம் எடுத்தனர்.
மதியம் 2 மணி வரை அந்தக் கப்பல் தென்பட்டது. பின்னர் அங்கிருந்து போய் விட்டது.
இது எந்த நாட்டுக் கப்பல், என்ன மாதிரியான கப்பல், இங்கு ஏன் வந்தது என்பது குறித்து உளவுத்துறை போலீஸாருக்கும் தெரியவில்லை. அவர்கள் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மர்மக் கப்பல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.