இன்று லோக்சபாவில் சத்யம் மோசடி குறித்த விவாதம்
டெல்லி: நாட்டையே உலுக்கிய சத்யம் நிறுவன மோசடி குறித்து இன்று லோக்சபாவில் விவாதிக்கப்படுகிறது.
ரூ. 7800 கோடி மோசடியை படு சாமர்த்தியமாக செய்து விட்டு சத்தம் போடாமல் வெளியேறி விட்டார் ராமலிங்க ராஜு. நாட்டையே உலுக்கிய இந்த மெகா மோசடி குறித்து இன்று லோக்சபாவில் விவாதிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து நேற்று நடந்த லோக்சபா அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் சத்யம் மோசடி குறித்து விவாதிக்க வேண்டும் என ஒரே குரலில் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து இன்று முக்கிய விவாதமாக சத்யம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியே, சத்யம் நிறுவன மோசடி குறித்து விவாதிக்கலாம் என கூட்டத்தில் ஆலோசனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவாதங்களுக்கு கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா பதிலளிப்பார்.
இதற்கிடையே, சத்யம் நிறுவன மோசடி குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார்.