சிறுமிக்கு திருமண முயற்சி- நிறுத்திய கலெக்டர்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 13 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்ற பெற்றோர்களின் முயற்சியை மாவட்ட கலெக்டர் சண்முகம் தடுத்து நிறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ளது பெரிய மல்ல அள்ளி மலை கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி நீலம்மாள். இவர்களுக்கு மாதம்மாள் (13) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 -ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூப்பெய்தியுள்ளார். இதனால் அவருக்கு கடந்த வாரம் அந்த சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் வீரணபள்ளி கிராமத்தில் வசிக்கும் நரசிம்மனின் சகோதரி குடும்பத்தினரும், பென்னாகரத்தில் வசிக்கும் நீலம்மாளின் சகோதரர் குடும்பத்தினரும் சகல சீர் வரிசைகளுடன் கலந்து கொண்டனர்.
அப்போது, மாதம்மாளை தனது மகன் முத்துராஜ் என்பவருக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று நரசிம்மனிடம் அவரது சகோதரி கோரினார்.
அதேபோன்று, நீலம்மாளிடம் அவரது சகோதரர் தனக்குத்தான் மாதம்மாளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கோரினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில், மாதம்மாளை நரசிம்மனின் சகோதரி மகனுக்கு 10 நாளில் திருமணம் செய்து கொடுப்பது என அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
இதனால் வெகுண்ட நீலம்மாளின் சகோதரர், பெண் கிடைக்காத ஆத்திரத்தில், பால்ய விவாகம் நடக்கப் போவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகத்துக்கு புகார் அனுப்பினார்.
இதையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு தேன்கனிக்கோட்டை தாசில்தார் அனக்லைலாவுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தாசில்தார் சிறுமி மாதம்மாளிடம் நேரில் விசாரணை நடத்தினார். அப்போது, தான் படிக்க விரும்புவதாகவும், திருமணத்தில் நாட்டம் இல்லை என்றும் சிறுமி மாதம்மாள் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் திருமண ஏற்பாடுகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இது போன்ற பால்ய விவாகங்கள் நடக்காமல் இருக்க தன்னார்வ குழுவினர், தொண்டு நிறுவனத்தினர், வருவாய் துறையினர், யூனிசெப் அமைப்பு, கிராம மருத்துவ துறையினர் சார்பில் ஓர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழு மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணி்ப்பில் ஈடுபடும். யாராவது சிறுமிகளுக்கு கட்டாய திருமண ஏற்பாடு செய்வதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.