காதலர் தின எதிர்ப்பு- ஸ்ரீராம் சேனா போராட்டம் வாபஸ்
பெங்களூர்: காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளைப் பிடிக்கப் போவதாக அறிவித்திருந்த போராட்டத்தை ஸ்ரீராம் சேனா விலக்கிக் கொண்டுள்ளது.
காதலர் தினத்தன்று காதல் ஜோடிகளைப் பிடித்து போலீஸாரிடமோ அல்லது பெற்றோரிடமோ ஒப்படைப்போம் என ஸ்ரீராம் சேனா அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று கர்நாடக போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அந்த அமைப்பின் தலைவர் முத்தாலிக்கை கைது செய்தனர். அதேபோல மாநிலம் முழுவதும் ஸ்ரீராம் சேனா அமைப்பினரையும் வளைத்து வளைத்துக் கைது செய்தனர்.
குல்பர்காவில் வைத்து முத்தாலிக்கைக் கைது செய்தனர் போலீஸார். அதன் இணை அமைப்பாளர் பிரசாத் அட்டவார் மங்களூரில் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் 150க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பாக தங்களது போராட்டத்தை கைவிடுவதாக அட்டவார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், காதலர் தினத்தை நாங்கள் கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்த்து வருகிறோம். இருப்பினும் இந்த ஆண்டு நாங்கள் அறிவித்த எந்தப் போராட்டத்தையும் நடத்த மாட்டோம். அவற்றை கைவிடுகிறோம் என்றார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூர் நகரில் 18 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முக்கியப் பகுதிகளான ஃபோரம் உள்ளிட்ட இடங்களில் மப்டி உடையிலும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். காதல் ஜோடிகளுக்கு இடையூறு செய்வோரைப் பிடிக்க அவர்கள் போடப்பட்டுள்ளனர்.
மேலும், பப்கள், பார்கள், ஹோட்டல்கள், வர்த்தக மால்கள், வாலன்டைன் கார்டு விற்கும் கடைகளுக்கும் உரிய பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் பித்ரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications