விஷமான மீ்ன்-தூத்துக்குடி வந்த கப்பலில் 4 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடிக்கு வந்த கொரிய நாட்டுக் கப்பலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் கண்டலா துறைமுகத்தில் இருந்து மாடு, கோழி தீவணங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் ஒன்று கொரியா நாட்டுக்கு சில நாட்களுக்கு முன் புறப்பட்டது.
இந்த கப்பலில் கொரியா, பர்மா நாட்டை சேர்ந்த 20 பேர் இருந்தனர்.
நேற்று முன்தினம் கன்னியாகுமரியை கப்பல் நெருங்கி கொண்டிருந்தது. அப்போது கப்பலில் இருந்தவர்கள் மீன், மாட்டு இறச்சியை சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்கு திடீரென்று வாந்தி-பேதி ஏற்பட்டது.
இதுபற்றி கப்பல் கேப்டன் கிம் ஹீ ஓ கொரியாவில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அங்கிருந்து இந்திய தூதரகம் மூலம் டெல்லிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி கபில்குமார், மருத்துவ குழு, கடலோர பாதுகாப்பு படை மற்றும் போலீசுடன் பூம்புகார் போக்குவரத்து கழகப படகுடன் நேற்று பகல் 1 மணிக்கு கப்பலுக்கு சென்றார்.
கப்பலில் மயங்கிய நிலையி்ல் இருந்த ஊழியர்களை மருத்துவ குழு சோதித்தது. அதில் 4 பேர் ஏற்கனவே இறந்ததும், அவர்கள் ஜோபில் பிங், கோஷியாங்க், குவான், ஷா டெவிட், ஷாமை யோ ஹெட் என்பதும் தெரிய வந்தது.
மயங்கிய நிலையில் இருந்தவர்களுக்கு கப்பலிலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கு பிறகு அவர்களுக்கு நினைவு திரும்பியது. கேப்டன் உள்பட 2 பேருக்கு கை, கால்கள் மரத்து போயிருந்ததால் அவர்கள் குமரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுப் போய் ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து கப்பலில் மீதம் இருந்த உணவு பொருட்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடலில் பயணித்தபோது பேச்சா' என்ற மீனையும் அதன் முட்டைகளையும், கப்பல் ஊழியர்கள் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த மீன் விஷத்தன்மை கொண்டது என்று கூறப்படுகிறது.
மீன் முட்டைகளை அதிகமாக தின்ற 4 பேர் தான் பலியாகி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இறந்துபோன 4 மாலுமிகளின் உடல்கள் தற்போது கப்பலிலேயே வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அல்லது நாளை காலை அந்த கப்பல் மீண்டும் கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மாலுமிகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் விமானம் மூலம் கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கப்பலில் வந்த ஊழியர்கள் மரணமடைந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்பட்டது.