ஸ்டாலினை விட மாட்டேன்.. சபதம் எடுத்த வைகோ! தவெக போட்டு வைத்திருக்கும் ‘மாஸ்டர்’.! என்னங்க சொல்றீங்க?
சென்னை: திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற தகவல்கள் திமுக வட்டாரங்களில் பரவி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக தமிழக வெற்றிக் கழகம் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஸ்டாலினுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை களமிறக்க தவெக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றார். பின்னர், இரண்டு தொகுதிகளில் ஒன்றை மட்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்தத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் சாதாரண தேர்தலாக இல்லாமல், ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் பலத்தை சோதிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
அதனால், எந்தக் கட்சி யாரை வேட்பாளராக அறிவிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, திமுக தனது மக்கள் செல்வாக்கை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே நேரத்தில், சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய், "உங்க அப்பாவை காணோமே" என்று ஸ்டாலினை விமர்சித்தது அரசியல் அரங்கில் பெரிய விவாதமாக மாறியது.
முக ஸ்டாலின்
அதன்பிறகு, திமுக தொண்டர்கள் பலரும் ஸ்டாலின் நேரடியாக சட்டப்பேரவைக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேருவும், "சட்டப்பேரவைக்கு ஸ்டாலின் வருவார்" என்று கூறியிருப்பது இந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அறிவாலயம்
இந்தச் சூழலில், சென்னை அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, திருச்சி கிழக்கில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று மட்டும் பதிலளித்ததார். இந்நிலையில், திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், அதற்கு சமமான அரசியல் அனுபவம் கொண்ட வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைகோ
அதன் ஒரு பகுதியாக, தற்போது திமுக கூட்டணியில் உள்ள மதிமுக சார்பில், அதன் பொதுச்செயலாளர் வைகோவை திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடச் செய்வது குறித்து தவெக தரப்பில் ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இதனா திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் வைகோ போட்டியிடலாம் என்கின்றனர்.
துரை வைகோ
ஏற்கனவே, திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அந்தக் கட்சிக்கு திருச்சி மாவட்டத்தில் தனிப்பட்ட வாக்கு வங்கி இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். அதனால், வைகோவை வேட்பாளராக நிறுத்தினால், ஸ்டாலினுக்கு கடும் போட்டியை உருவாக்க முடியும் என்று தவெக தரப்பில் கணக்கிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் போட்டி?
இருப்பினும், இந்த அரசியல் நகர்வுகள் குறித்து எந்தக் கட்சியும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் யார் போட்டியிடுவார்கள், கூட்டணி அமைப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பான இறுதி முடிவுகள், தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகே தெரிய வரும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வெறும் இடைத் தேர்தலாக மட்டும் இல்லாமல், தமிழக அரசியலிலை தீர்மானிக்கும் முக்கிய களமாக மாறியுள்ளது.














Click it and Unblock the Notifications