மதுரையில் காதல் சின்னத்துக்கு பாடை ஊர்வலம்!
உலகம் முழுக்க இன்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவும், இந்து அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மதுரையில் இந்து இளைஞர் பேரவையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பெரியார் பேருந்து நிலையம் அருகே குவிந்தனர்.
பின்னர் காதலர் உருவ பொம்மையை பாடையில் வைத்து சங்கு ஊதி எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை, தடுத்து போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
செய்தியாளர்கள் மீது பாய்ந்த ஏ.சி:
அப்போது, உதவி ஆணையர் இலங்கேஸ்வரன் தாறுமாறான வார்த்தைகளால் செய்தியாளர்களையும், புகைப்படக் கலைஞர்களையும் திட்டத் தொடங்கினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீடியாக்காரர்கள் அப்படியே சாலையில் அமர்ந்து மறியலில் குதித்தனர். மேலும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.
காதலர் தின எதிர்ப்பாளர்களின் போராட்டத்தோடு திடீரென பத்திரிக்கையாளர்களும் மறியல் குதித்ததால் பரபரப்பு கூடியது.
நிலைமை சிக்கலாவதைப் பார்த்த உதவி ஆணையர் இலங்கேஸ்வரன் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதையடுத்து பத்திரிகையாளர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.