ஈழத் தமிழர்களின் வரலாறு வட மாநிலத்தவருக்குத் தெரியவில்லை - சரத்குமார்
தென்காசி: ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிகள் என்ற வரலாறு வட மாநிலத்தவர்களுக்கும், அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் தெரியவில்லை. அதை நான் டெல்லியில் நடைபெறும் எங்களது கட்சி உண்ணாவிரதப் போராட்டத்தின்போது விளக்கப் போகிறேன் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் நடந்தது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சரத்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வருகிற 25-ந்தேதி டெல்லியில் எங்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர்கள் இலங்கை பூர்வீக குடிகள்தான் என்பதை விளக்கமாக பேசப்போகிறேன்.
வடமாநில மக்களுக்கும், தலைவர்களுக்கும் அந்த வரலாறு தெரியவில்லை.
வடமாநில முதல்-அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக கருதவேண்டும் என்று அவர்களிடம் கூறப் போகிறேன்.
பிரியங்கா வந்த பிறகுதான் தாக்குதல் உக்கிரம் ...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினியை, பிரியங்கா சந்தித்த பிறகுதான் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனவே சிறையில் பிரியங்கா நளினியுடன் என்ன பேசினார் என்ற விவரத்தை வெளியிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்துவதை, வன்முறையை நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்காக இளைஞர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதை நிறுத்த வேண்டும்.
தேசிய கட்சியுடன் கூட்டணி...
40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதுதான் எனது முடிவு. ஆனால் கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மார்ச் 15-ந்தேதியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிடும். பெரும்பாலும் தேசிய கட்சியுடன் தான் கூட்டணி இருக்கும்.
விரைவில் தமிழக விவசாயிகள் கருத்தரங்கு நடத்த உள்ளோம். எங்கள் கட்சி பூரண மதுவிலக்கை அடிப்படையாக கொண்டு உள்ளது. இருந்தாலும் பிராந்தியை தமிழக அரசு விற்பனை செய்ய அனுமதித்து உள்ளது.
எனவே, கள் ளை ஒரு விவசாய பொருளாக கருதி கள் இறக்க அனுமதிக்க வேண்டும். மதுக்கடைகளை மாலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும் என்றார் சரத்குமார்.