பாஜக வந்தால் மீண்டும் ராமர் கோயில்: அத்வானி
கோரக்பூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் மீண்டும் ராமர் கோயில் கட்டப்படும் என அக்கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அத்வானி பேசுகையில்,
ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும் போது மிகுந்த எழுச்சி அடைகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் மட்டுமே இந்த கோஷத்துக்குரிய உண்மையான பலன் நமக்கு கிடைக்கும்.
பாஜக இந்தியாவை ஐந்து ஆண்டு ஆட்சி செய்துள்ளது. இதற்கு உத்தரப் பிரதேச மக்களும், அயோத்திய விவகாரமும் தான் முக்கியக் காரணம். இந்தியாவில் அயோத்தி விவகாரம் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்பதை நாங்கள் மறந்து விடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை நிறைவேற்றுவோம்.
கடந்த ஐந்து ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு வலுவிழந்துவிட்டது. அப்பாவி மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஐஎஸ்ஐ அமைப்புக்கு இருக்கும் பங்கு குறித்து பாகிஸ்தான் விசாரிக்கவில்லை. ஐஎஸ்ஐ அமைப்பை விசாரிக்காமல் ஒரு தீவிரவாதியையும் பிடிக்க முடியாது. பெனசிர் கொலை வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications