முகர்ஜியிடம் ராமதாஸ்-திமுக கூட்டணி மனு
டெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திமுக தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவையின் துணைக் குழு ஆகியோர் சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி மனு அளித்தனர்.
டாக்டர் ராமதாஸும், துரைமுருகன் தலைமையிலான இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை துணைக் குழுவினரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நேற்று டாக்டர் ராமதாஸ் சோனியா காந்தியை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விளக்கி மனு ஒன்றை அளித்தார்.
அதேபோல குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை துரைமுருகன் தலைமையிலான குழுவினர் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இன்று டாக்டர் ராமதாஸ் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார்.
ராமதாஸிடம் நாராயணன் விளக்கம்
பின்னர் டாக்டர் ராமதாஸை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து இலங்கை விவகாரம் தொடர்பாக பேசினார்.
அதேபோல, துரைமுருகன் தலைமையிலான குழுவினர் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து அவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தை இலங்கை விவகாரமாக கருதாமல் நமது நாட்டு விவகாரமாக கருத வேண்டும் என்று கூறி எங்களது உணர்வுகளை, தமிழக மக்களின் உணர்வுகளை சோனியா காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications