ஒட்டுகேட்பு-மாஜி முதல்வர் வசுந்தரா மீது புகார்
ராஜஸ்தானின் முதல் பெண் முதலமைச்சர் வசுந்தரா ராஜே. இவர் கடந்த 2003 முதல் 2008 டிசம்பர் வரை முதல்வர் பதவியில் இருந்தவர். இந்நிலையில் அங்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வியடைய தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவர் பதவியில் இருந்த தனது கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ரகசியமாக பதிவு செய்ததாக குற்றம் சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டவுடன் அவரது குட்டு உடைந்துள்ளது. இது குறித்து ஜெய்ப்பூர் ஏடிஜி கன்ஹியா லால் பைர்வா கூறுகையில்,
முன்னாள் அமைச்சர் கிரோரி லால் மீனா, எம்எல்ஏ சுரேந்திர சிங் ரதோர், குஜ்ஜார் தலைவர் பிரகலாத் குன்ஜால், அட்டர்சிங் பதானா என தனக்கு நெருக்கமானவர்களின் அவர் பதிவு செய்து தரும்படி வசுந்தரா ராஜே கேட்டுள்ளார். ஆனால் இது எதற்கும் அவர் எங்களுக்கு எழுத்து மூலம் உத்தரவு அளிக்கவில்லை.
இந்திய தொலைபேசி சட்டப்படி சிறப்பு காரணங்களுக்காக தொலைபேசி அழைப்பை பதிவு செயயலாம். ஆனால் அதற்கு மாநில உள்துறை செயலரிடம் இருந்து எழுத்து மூலமான உத்தரவு அளிக்கப்பட வேண்டும். அவர் இல்லாத நிலையில் டிஐஜி உத்தரவு பிறப்பித்து உள்துறை செயலரிடம் அடுத்த மூன்று நாட்களுக்குள் கையெழுத்து வாங்கி தர வேண்டும்.
ஆனால் 7 முக்கிய நபரின் தொலைபேசி அழைப்புகளை பதிவு செய்ய டிஐஜி ஒருவர் வாய்மொழி உத்தரவே வழங்கியுள்ளார். உரிய வகையில் கேட்காதது குற்றம் என்பதை தாண்டி இது சட்டத்துக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளது என்றார் அவர்.
ராஜஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கடாரியா கூறுகையில், இது தொடர்பான எதுவும் எனது மேஜைக்கு வந்தது கிடையாது. அப்படி இருக்கையில் நான் எப்படி கருத்து சொல்ல முடியும் என்றார்.
இதையடுத்து தற்போதைய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் இவ்விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.