திடீர் மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது
மதுரை: டீசல் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியல் செய்த சுமார் 10,000 போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற நல அமைப்பு சார்பில் மறியில் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மதுரையில் சிஐடியு அகில இந்தியச் செயலாளர் உ.ரா.வரதராசன் உட்பட சுமார் ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள், டீசல் விலையை லிட்டருக்கு ரூ 10 குறைக்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுநர் உரிமத்தைப் பறிக்கக் கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.
மேலும், கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற தொழிலாளர் கடன் தொகையை நிர்வாகம் பிடித்தம் செய்து தருவதை அரசு ரத்து செய்து, கூட்டுறவு நிறுவனங்களை சீர்குலைக்க கூடாது.
போக்குவரத்து கழகங்கள் செயல்படுவதற்கு பள்ளிக் குழந்தைகள் மற்றும் இதர இலவச பயணம் செய்வதையொட்டி ஏற்றுக் கொண்ட 1500 கோடி ரூபாயை தமிழக அரசு திரும்ப வழங்க வேண்டும்.
ஒப்பந்தப்படி 240 நாட்கள் பணிமுடித்த 15 ஆயிரம் ஓட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்று, இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கம்யூடேசன் வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.