கர்நாடகத்தில் பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு-கருத்துக் கணிப்பு

சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி- சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளும் பாஜகவுக்கு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் மக்கள ஆதரவு கணிசமாக உயர்ந்துள்ளது உறுதியாகியுள்ளது.
இப்போது அங்கு மக்களவைத் தேர்தல் நடந்தால் பாஜக 39 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 35 சதவீத வாக்குகளையும், கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் 15 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 2 சதவீத வாக்குகளையும் பெறும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இது கடந்த சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு 4 சதவீத வளர்ச்சியாகும். காங்கிரஸ் 1 சதவீத வாக்குகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 5 சதவீத வாக்குகளையும் இழந்துள்ளன.
பாஜகவின் வெற்றியைத் தடுத்து நிறுத்த காங்கிரஸ் முன் உள்ள ஒரே வழி தேவெ கெளடாவுடன் கூட்டணி சேருவது தான். ஆனால், தான் 2 இடத்தில் வென்றால் கூட போதும்.. காங்கிரஸ் வென்றுவிடக் கூடாது என்ற நிலையில் இருக்கிறார் கெளடா.
ஆனால், அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி தான் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற மூடில் உள்ளார்.
ஆனால், கூட்டணி என்று வந்தால் காங்கிரசிடம் பாதிக்குப் பாதி இடங்களையாவது கேட்டு கெளடா தொல்லை தருவார் என்பது மட்டும் நிச்சயம்.
மேலும் கெளடாவுடன் கூட்டணி கூடாது என்று சமீபத்தில் காங்கிரசில் இணைந்த முன்னாள் துணை முதல்வரான சித்தராமையா கூறி வருகிறார். கெளடாவின் முன்னாள் வலதுகரமான இவருக்கு மைசூர் பகுதியில் பெரும் செல்வாக்கு உண்டு. பிற்பட்ட குருபா சமூகத்தினரின் வாக்குகளை அள்ள இவரையே காங்கிரஸ் நம்பியுள்ளது.
இவரை சமாதானப்படுத்தினாலும் கெளடாவின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு கூட்டணி அமைபபது என்பது காங்கிரசக்கு பெரும் தலைவலியாகவே இருக்கும். இதனால் தான் இதுவரை கெளடாவுடன் கூட்டணி என்பதில் காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.
இந்தக் கூட்டணி வராமல் மும்முனைப் போட்டி வந்தால் மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் பெரும்பாலானவற்றை பாஜக அப்படியே அள்ளிச் சென்றுவிடும் என்பதை கருத்துக் கணிப்பு உறுதி செய்துள்ளது.
மேலும் பாஜக ஆட்சிக்கு வர முக்கிய காரணமாக இருந்த முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த லிங்காயத்துகள் (முதல்வர் எதியூரப்பாவும் இதே சமூகத்தைச் சேர்ந்தவர் தான்) மத்தியில் பாஜகவுக்கு மேலும் ஆதரவு அதிகரித்துள்ளதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இத்தோடு வழக்கமாக காங்கிரசுக்கு வாக்களின் தலித்துகளின் வாக்குகளையும் பாஜக கவர ஆரம்பித்துள்ளதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் பாஜகவே அதிக இடங்களைப் பிடிக்கும் நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications