அதிமுக சேர்த்த சொத்து.. ரூ. 56,000 கோடி கடன்!
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தை துவக்கி வைத்து அதிமுக எம்எல்ஏ சண்முகம் பேசுகையி்ல்,
பிரம்மகுண்டத்தைச் சேர்ந்த சைமன் என்பவர் ஆப்கான் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் மத்திய அரசுக்கு எதிராக அவர் ஒரு கருத்தை தெரிவித்தபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கூச்சலிட்டனர். இதனால் அவையில் குழப்பம் ஏற்படவே சண்முகம் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய சண்முகம், இந்த பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது தமிழகம் 8 ஆண்டுகள் பின்னோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதை உணர முடிகிறது. முந்தைய திமுக ஆட்சியைப்போல தமிழகம் திவாலாகும் நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் சேர்த்து வைத்த சொத்தை உட்கார்ந்து கொண்டு செலவு செய்வது போல இந்த அரசு நடந்து கொண்டிருக்கிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் அன்பழகன், அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.28,000 கோடி கடன் இருந்தது. அதிமுக ஆட்சி முடியும்போது, அந்த கடன் ரூ.56,000 கோடியாக உயர்ந்திருந்தது. இதுதான் அவர்கள் சேர்த்து வைத்த சொத்து என்றார்.
தொடர்ந்து பேசிய சண்முகம், இந்த மூன்றாண்டுகளில் மேலும் ரூ. 31,000 கோடி கடன் உயர்ந்துள்ளது. முறையாகக் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி என்ற திட்டம் ஒரு ஏமாற்றுத் திட்டம்.
விவசாயிகளால் கடனைச் செலுத்த முடியாது என்று தெரிந்து தேர்தலுக்காக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஆற்காடு வீராசாமி, எல்லா விவசாயிகளும் கடனை திருப்பி செலுத்தாவிட்டாலும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 99 சதவீதம் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்றார்.