போர் தீவிரத்தை குறைத்து விட்டதாம் இலங்கை
கொழும்பு: ஐ.நா. பிரதிநிதி அப்பாவிகள் கொல்லப்படுவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ள பின்னணியில் போர் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சிறப்புத் தூதராக ஜான் ஹோம்ஸ் நேற்று கொழும்பு வந்தார். அப்போது அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அவர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.
இரு தரப்பும் அப்பாவிகள் பலியாவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், முல்லைத் தீவில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க போர்த் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கே கூறுகையில், முல்லைத்தீவு பகுதியில், போர்த் தீவிரத்தை வெகுவாகக் குறைத்துள்ளோம் என்றார்.
வன்னிப் பகுதிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை அரசு இதை மறுத்துள்ளது.
ஏற்கெனவே அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்துவிட்டதாகவும் தற்போது ஒரு லட்சத்துக்கும் குறைவானவர்களே அங்கு இருக்கலாம் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் முகாமில் தொற்று நோய்-7 சிறார்கள் பலி:
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து வெளியேறிய தமிழர்கள் கிளிநொச்சி பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு சரியான சுகாதார வசதிகள் இல்லாததால் தொற்று நோய் பரவி வருகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் நிமோனியா நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இவர்களில் 7 சிறுவர்கள் உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி கிளிநொச்சி சுகாதார சேவை அதிகாரி டாக்டர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், வெப்ப நிலை அதிகரித்து வருவதால் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது என்றார்.
மாத்தனன், அம்பலன், பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய இடங்களில் மக்கள் கடற்கரை மணல் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். அங்கேயும் தொற்று நோய் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications