முதுமலை காட்டில் தீ - 50 ஏக்கர் சாம்பல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம், முதுமலை வனச் சரணாலயத்தில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் சுமார் 50 ஏக்கர் அளவிலான வனப் பகுதி நாசமானது.
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்திற்குட்பட்ட தெப்பக்காடு வனத்துறை முகாமுக்குப் பின்புறமும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு திடீரென்று தீப்பிடித்தது.
தீ மளமளவென பரவி அப்பகுதியில் உள்ள செடி, கொடி, புற்கள், மரங்கள் ஆகியவற்றை சாம்பலாக்கியது. ஆக்ரோஷமாக எரிந்த தீ பல அடி உயரத்துக்கு ஜூவாலைகளை விரிந்து மிரட்டியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் சூழ்ந்தது.
வனத்துறையினர், மற்றும் தீயணைப்பு காவலர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க கடுமையாக போராடினர். ஆனால் தீயை எளிதில் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனையடுத்து தீயைக் கட்டுப்படுத்த அது பரவி வரும் திசைக்கு எதிர் திசையில் தீ வைக்கப்பட்டு, அங்குள்ள எரியக்கூடிய பொருட்கள் சாம்பலாக்கப்பட்டு உடனடியாக அணைக்கப்பட்டது. இதனையடுத்து தீ பரவுவது தடுக்கப்பட்டது.
இதையடுத்து அருகிலிருந்த் யானை முகாம் எந்த சேதமும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டது.
இருப்பினும் தீயில் சுமார் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்புளவிலான காடுகள் எரிந்து சாம்பலானது என்று கூறப்படுகிறது. புலி, யானை போன்ற பெரிய வன விலங்குகளுக்கு இந்த தீ விபத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்டுகிறது.
அதேபோல் கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் உள்ள பந்திர்பூர் வனவிலங்கு சரணாலயம், கேரளாவில் இருக்கும் பெரியார் புலிகள் சரணாலயம் ஆகியவற்றிலும் காட்டுத்தீ லேசான அளவில் ஏற்பட்டதாக தெரிகிறது.