For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அலைபாயும் ஜெ...!: அதிர்ச்சியில் இடதுசாரிகள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அதிமுக திடீரென காங்கிரசுடன் கூட்டணிக்கு அலைய ஆரம்பித்துள்ளதால் ஜெயலலிதாவை நம்பி அவரது கூட்டணிக்கு வந்த இடதுசாரிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

அதே போல காங்கிரசுடன் கூட்டணி என்றால் தன்னை வெட்டிவிடவும் ஜெயலலிதா தயார் தான் என்பதை உணர்ந்து கொண்டுள்ள மதிமுகவும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

ஆனால், நம்பி வந்தவர்களை இவ்வாறு பாதியில் கவிழ்த்துவிடுவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மூன்றாவது அணி அமைப்போம் என்று தெலுங்கு தேசம், சமாஜ்வாடி கட்சிகளுடன் பலசுற்று பேச்சு நடத்தி அணி அமைத்துவிட்டு ஜனாதிபதி தேர்தலின்போது பாஜகவுடன் கூட்டு சேர்ந்தார் ஜெயலலிதா. இதன்மூலம் மூன்றாவது அணிக்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

இந் நிலையில் தான் அமெரிக்க-இந்திய அணு ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரசுடன் மோதிவிட்டு ஆதரவை வாபஸ் பெற்றனர் இடதுசாரிகள். காங்கிரஸ் கூட்டணில் திமுக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக திமுகவுடனான உறவை இடதுசாரிகள் துண்டித்துக் கொண்டனர்.

கொள்கைரீதியில் ஜெயலலிதாவுக்கும் இடதுசாரிகளுக்கும் ஒத்தே வராது என்றாலும் வேறு வழியில்லாமல் அவருடன் கூட்டணி சேர்ந்தனர் இடதுசாரிகள்.

இவர்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டாலும் இன்னொரு பக்கம் காங்கிரசுடன் கூட்டணிக்கு மறைமுக முயற்சிகள் ஜெயலலிதா மேற்கொண்டு தான் வருகிறார்.

இதில் ஜெயலலிதாவுக்கு ஆதரவான பல டெல்லி, தமிழக காங்கிரஸ் தலைவர்களும் ஆர்வம் காட்டினாலும் சோனியா-கருணாநிதி இடையிலான பரஸ்பர மரியாதை, எத்தனையே பிரச்சனைகள் வந்தாலும் இருவரும் காட்டும் அரசியல் நாகரீகம், பிரச்சனைகளை உடனுக்குடன் பேசித் தீர்ப்பது ஆகிய நடவடிக்கைகள் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டுள்ளது.

ஒரு பக்கம் காங்கிரஸ் கூட்டணிக்கு முயலும் ஜெயலலிதா இன்னொரு பாஜகவையும் விடவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, தமிழகத்தின் ஒரு பத்திரிக்கையாளர் ஆகியோர் மூலமாக பாஜக-ஜெயலலிதா இடையிலான நெருக்கமான நட்பு தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

ஆக, ஒரு பக்கம் இடதுசாரிகளை உடன் வைத்துக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணிக்கு முயற்சி.. இன்னொரு பக்கம் பாஜகவுடன் மறைமுக நெருக்கம் என்ற அதிமுக 'ட்ரிபிள் ஆக்ட்' தொடர்ந்து கொண்டுள்ளது.

இதில் காங்கிரசும் பாஜகவும் ஏற்கனவே ஜெயலலிதாவின் இந்த 'அரசியல் பல்டிகளின்' பலனை வெவ்வேறு கால கட்டங்களின் 'அனுபவித்துவிட்டவர்கள்' தான். இதனால் அவர் என்ன செய்தாலும் அவர்களுக்கு அதிர்ச்சி தராது.

ஆனால், இடதுசாரிகளுக்கு இது புது அனுபவம். காங்கிரசுடன் மோதல் என்ற காரணத்துக்காக அதிமுக கூட்டணிக்கு வந்த இவர்களுக்கு இன்னும் என்னவெல்லாம் 'காத்திருக்கிறதோ' தெரியவில்லை.

இப்போதுள்ள நிலவரப்படி அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை கூட்டணியில் இருந்தாலும் அது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு இணையான பலத்தில் இல்லை என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டதாலேயே காங்கிரசுடன் கூட்டணிக்கு அவர் முயல்வதாகத் தெரிகிறது.

மேலும் விஜய்காந்தையும் தனது கூட்டணிக்குள் இழுக்க திமுக-காங்கிரஸ் முயல்வதும் அதிமுவை கிலியில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி ஒன்று நடந்தால், பாமகவும் கூட்டணிக்கு வராவிட்டால் (அவர்கள் காங்கிரஸ் கூட்டணியிலேயே தொடர்ந்தால்) அதிமுகவின் நிலைமை மேலும் மோசமாகலாம்.

இந்த உண்மை நிலவரங்களையெல்லாம் உணர்ந்து தான் காங்கிரசுக்கு வலை வீசுமாறு ஜெயலலிதாவுக்கு அட்வைஸ் தந்துள்ளனர் அவரது ஆலோசகர்கள்.

இதில் அந்த 'அதிபுத்திசாலி' பத்திரிக்கையாளருக்கும் முக்கிய பங்கிருக்கலாம் என்றே தெரிகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் வெல்வது, பின்னர் மத்தியில் யார் ஆட்சி வர வாய்ப்பு உருவாகிறோ அவர்களை ஆதரி்பபது.. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வர உதவுவது.. இது தான் இந்த ஒட்டுமொத்த 'மூவ்'களின் சாரம்.

இதை காங்கிரஸ் புரிந்து கொண்டுவிட்டதால் தான் கூட்டணிக்கு ஜெயலலிதா அடி போட்ட மறுநிமிடமே 'கும்பிடு' போட்டுவிட்டு ஓடிவிட்டது.

ஆனால், நம்பி வந்த இடதுசாரிகள் தான் திக் பிரமையில் ஆழ்ந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X