பிகார்: முடிவை நிர்ணயிக்கப் போவது பாஸ்வான்-கருத்துக் கணிப்பு
டெல்லி: வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பிகாரி்ல் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கும் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
இங்கு ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணிக்கு 39 சதவீத மக்கள் ஆதரவு உள்ளதாகக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் லாலு பிரசாத் யாதவ்-காங்கிரஸ் கூட்டணிக்கு 38 சதவீத ஆதரவு இருப்பது தெரிகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இங்கு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போவது மத்திய அமைச்சரும் லோக் ஜன் சக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வான் தான் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
நிதிஷ்-பாஜக கூட்டணியை முறியடிக்க பாஸ்வானை கூட்டணிக்குள் இழுத்த ஆக வேண்டிய நிலைக்கு லாலு தள்ளப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஸ்வான் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளைப் பிரித்ததால் தான் அங்கு லாலுவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது நினைவுகூறத்தக்ககது.
இப்போது நடத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஸ்வானுக்கு 5 சதவீத மக்கள் ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், இது கடந்த சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் சரிவாகும்.
இதனால் அவரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள லாலு-காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்த ஆக வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆனால், தனக்கு உரிய மரியாதையையும் இடங்களையும் லாலு தராவிட்டால் மீண்டும் தனித்துப் போட்டியிடத் தயார் என பாஸ்வான் கூறி வருகிறார். இதனால் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்குள் இழுக்க வேண்டிய முழு பொறுப்பும் காங்கிரஸ் மீது விழுந்துள்ளது.
அதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
லாலு-காங்கிரஸ்-பாஸ்வான் கூட்டணி அமைந்தால் அது பிகாரில் நிதிஷ்-பாஜக கூட்டணி்யை விட அதிகமாக அல்லது குறைந்தபட்சம் இணையான இடங்களையாவது பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 40 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலத்தில் தேர்தல் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் ஜாதியே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் தேர்தலும் இதற்கு விதிவிலக்கல்ல என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது.
உயர் ஜாதியினரைப் பொறுத்தவரை 67 சதவீதம் பேர் பாஜக-நிதிஷ்குமார் கூட்டணியை ஆதரிக்கின்றனர். இவர்களில் வெறும் 18 சதவீதத்தினர் தான் லாலு-காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
நிதிஷ் குமார் சார்ந்துள்ள குர்மி-கோரி சமூகத்தினரில் 65 சதவீதம் பேர் பாஜக கூட்டணியையும் 23 சதவீதம் பேர் லாலு கூட்டணியையும் ஆதரிக்கின்றனர்.
யாதவர்களைப் பொறுத்தவரை 73 சதவீதம் பேர் லாலு பிரசாத் யாதவ்-காங்கிரஸ் கூட்டணியையும் வெறும் 13 சதவதத்தினர் நிதிஷ்குமார் கூட்டணியையும் ஆதரிக்கின்றனர்.
முஸ்லீம்களில் 62 சதவீதம் பேர் லாலு-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 17 சதவீதத்தனர் மட்டுமே நிதிஷ்-பாஜக கூட்டணியை ஆதரிக்கின்றனர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.