மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு?
டெல்லி: மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
லோக் சபா தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகியுள்ளது.
இதுதொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் கடந்த மாதம் தொடங்கின. முதலில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி மற்றும மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடனும், அதைத் தொடர்ந்து மாநிலத் தலைமைச் செயலாளர்கள், காவல்துறைத் தலைவர்களுடனும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக மத்திய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தாவுடன் தேர்தல் ஆணையர்கள் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையடுத்து மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல கட்டமாக தேர்தல் நடத்துவதை விட ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதே நல்லது என திமுக உள்ளிட்ட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் ஒரே கட்ட வாக்குப் பதிவுக்கு வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. எனவே இரு கட்ட வாக்குப்பதிவு அல்லது அதிகபட்சம் 3 கட்ட வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.