வன்னியில் நேற்று நடந்த தாக்குதலில் 44 தமிழர்கள் படுகொலை
வன்னி: வன்னி பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு இலங்கைப் படையினர் நடத்திய கோரத் தாக்குதலில் 44 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 170 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதே முக்கால் மணிக்குத் தொடங்கி பத்தே முக்கால் மணி வரை ஒரு மணி நேரம் இந்த இடைவிடாத எறிகணைத் தாக்குதல் நடந்தது.
மக்கள் பாதுகாப்பு வலய பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால்- பொக்கணை- மாத்தளன் பகுதிகளில் இத்தாக்குதல் நடந்தது.
அங்கு நடந்த தாக்குதலில் 19 தமிழர்களும், இரணைப்பாலை- ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 13 தமிழர்களும் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் காயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் பல உடல்கள் உள்ளன. கொல்லப்பட்டவர்களில் இருவர்கள் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, மக்கள் பாதுகாப்பு வலய பகுதியான வலைஞர் மடத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 72 பேர் காயமடைந்துள்ளனர்.
மாத்தளன் பகுதியில் சனிக்கிழமை முற்பகல் நடந்த தாக்குதலில் 2 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
புலிகள் தாக்குதல் 10 சிங்களர்கள் பலி
இதற்கிடையே, இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் புகுந்து விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பத்து சிங்களர்கள் கொல்லப்பட்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் இங்கினியாக்கல், நெல்லியத்த, கரம்பிட்டி ஆகிய சிங்கள கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்குள் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் புகுந்தனர்.
அவர்கள் கண்ணில் தென்பட்டோர் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் விடுதலைப்புலிகள் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.