4 ஆண்டுகளில் 85 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் - ப.சிதம்பரம்
திருச்சி: காங்கிரஸ் கட்சியின் கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் 85 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டிலே முதன்முறையாக திருச்சியில் ரூ 75 கோடி செலவில் அதி நவீன முன்மாதிரி விமான நிலைய ஓடுதளம் கட்டப்பட்டுள்ளது. இதை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா, எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது சிதம்பரம் பேசுகையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இப்போது அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், பிரன்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளே பொருளாதாரமே சுனாமியால் திணறி வருகின்றன. இந்த நிலையிலும் நமது நாட்டின் வளர்ச்சி வகிதம் 7.1 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் 35.50 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. கிராமங்களில் இள நீர் விற்பனை செய்யும் பெண்களிடம் கூட செல்போன் உள்ளது. அதற்காக நாட்டில் வறுமை இல்லவே இல்லை என்று கூற மாட்டேன். 25 சதவீதத்தினர் வறுமையில் தான் உள்ளனர்.
ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் 85 கோடி மக்களின் வாழ்க்கை நிலை மேம்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரம் விரைவில் 9 சதவீதத்தை எட்டும் என்றார்.