தடையை மீறி நாளை உயர்நீதிமன்றத்திற்குள் நுழைய வக்கீல்கள் முடிவு

சென்னை மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கத்தின் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், பெண் வக்கீல்கள் சங்கத் தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் பால் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், உயர்நீதிமன்றத்திற்குள் விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி நாளை உள்ளே நுழைய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், வக்கீல்கள் மீது தடியடி நடத்தி, வன்முறை வெறியாட்டம் நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
உயர்நீதிமன்றம் தற்போது தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாயா உத்தரவின் பேரில், போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டுள்ளன. கோர்ட் பணியாளர்களைத் தவிர மற்ற யாரும் உள்ளே நுழையக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் நாளை தடையை மீறி உள்ளே நுழையப் போவதாக வக்கீல்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications