மக்கள் நம்பிக்கை இழந்த காங்.- வரதராஜன்!
தேனி: நாட்டு மக்களின் நம்பிக்கையையும், ஆளும் தகுதியையும், காங்கிரஸ் கட்சி இழந்து விட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேனியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தும், அதற்கான மாற்றுப் பாதையை முன் நிறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அளவில் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கடந்த 20ம் தேதி பிரச்சாரத்தை துவக்கியது. இது வரும் 27ம் தேதி வரை நடக்கும்.
இப்பிரச்சாரத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். கோரிக்கைகளை விளக்கி 3.5 லட்சம் பிரசுரம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளோடு இடது சாரிக்கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்கி மக்களை சந்திக்கும்.
உலக பொருளாதார நெருக்கடியால் சென்னை, கோவை, மதுரை, கரூர், திருப்பூர் போன்ற பெரு நகரங்களில் ஏற்றுமதி தொழில் முடங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க 20 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பணம் ஏகபோக முதலாளிகளுக்கு சலுகையாக அளிக்கக் கூடாது. சாதாரண மக்களின் வேலை வாய்ப்பைப் பாதுகாக்க இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.
கிராமப்புற வேலை உறுதித் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடத்தப்படவில்லை என மத்திய அரசின் தணிக்கைக் குழு கூறியுள்ளது.
உயர் நீதி மன்றத்திலேயே வழக்கறிஞர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. காவல்துறையின் அத்துமீறல் தமிழ் நாட்டில் அதிகமாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய கேடாகும்.
இலங்கையில் நடைபெறும் தாக்குதல் இரண்டு புறமும் நிறுத்தப்பட வேண்டும். இப்பிரச்சினையில் தமிழ்நாட்டு கட்சிகள் ஒருமித்த குரல் கொடுக்க வேண்டும்.
நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது. நாட்டை ஆளும் தகுதி அக்கட்சிக்கு இல்லை. காங்கிரசை தோற்கடிப்போம். பாஜகவையும் தோற்கடிப்போம். இக் கட்சிகளோடு கூட்டு சேரும் கட்சிகளைப் புறக்கணிப்போம் என்றார்.