திமுக அரசை நீடிக்க விடுங்கள்: கருணாநிதி
சென்னை: வன்முறையால் நாட்டில் உள்ள நன்முறைகளை கெடுக்காதிர்கள். தமிழக அரசை நீடிக்க விடுங்கள். மத்திய அரசை வாழவிடுங்கள் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் தொலை தொடர்பு சேவையின் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் 3-ஜி சேவையை பிஎஸ்என்எல் அமைப்பு நேற்று அறிமுகப்படுத்தியது.
இதை மருத்துவமனையில் இருந்தவாறே தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் நவீன சேவையான 3 ஜியை சென்னையில் துவக்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தமிழகத்தில் மேற்கொண்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரே சமயத்தில் ஏழை எளிய மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை நாம் எப்போதும் சரித்திர கல்வெட்டுகளாக மாற்றுகின்றோம்.
என் உடம்பிலே கடைசி துளி ரத்தம் ஒட்டிக் கொண்டிருக்கும் போதும், இறுதி மூச்சு இருக்கிற வரையிலும் மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், ஏழை எளியவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.
தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் வற்புறுத்துகின்றனர்.
என்றைக்கும் ஏழை, எளிய மக்களின் அன்பனாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருக்கும் இந்த அரசை நீடிக்க விடுங்கள். மத்திய அரசை வாழ விடுங்கள். மத்திய, மாநில அரசையும் ஒன்றுபடுத்தியிருக்கின்ற தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுங்கள்.
நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்ற முன்வாருங்கள். வன்முறைகளால் நாட்டிலே உள்ள நன்முறைகளைக் கெடுக்காதீர்கள் என்று எல்லோருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications