நம்ம வீட்டு பிள்ளைக்கு கிடைத்த பெருமை-கருணாநிதி
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.
சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.
குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.
தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.
ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.