அரியலூர் அருகே ஏரியில் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் !
அரியலூர்: அரியலூர் அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஏரியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அரியலூர் அடுத்த திருமானூர் அருகே உள்ளது வைப்பூர். இந்த ஊரில் இருந்து அரியலூருக்கு நகர பேருந்து ஒன்று இன்று காலை சென்றது. பஸ்சை டிரைவர் தனசாமி என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்த பஸ்சில் 17 மாணவர்கள், 3 மாணவிகள், 2 ஆண்கள், 3 பெண்கள், என மொத்தம் 25 பேர் பயணம் செய்தனர்.
பஸ் தூத்தூர் அருகே வளைவில் சென்ற போது பஸ் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெரிய ஏரிக்குள் கவிழ்ந்தது.
இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பஸ்சில் இருந்தவர்களை பத்திரமாக காப்பாற்றினர்.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தி்ல் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த 10 பேர் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.