வக்கீல்கள்-போலீஸ் மோதல் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த வரலாறு காணாத கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரி வக்கீல்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.
அப்போது தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு இந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, சீரியஸானது.
வக்கீல்கள் மாத்திரமல்ல நீதிபதிகளும் கூட இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்ட வாகனங்களுக்குரிய வக்கீல்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து தமிழக அரசு பெருந்தன்மையுடன் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
பின்னர் பெஞ்ச் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
- யாருடைய உத்தரவின் பேரில் போலீஸார், உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று தடியடி நடத்தினர் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.
- உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ள காவல் நிலையத்தை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும்.
- ஓய்வு பெற்ற நீதிபதிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசு உச்சநீதிமன்றத்திடம் கொடுக்க வேண்டும்.
- நாளைக்குள் இவற்றை தமிழக அரசு செய்ய வேண்டும்.
- இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டுமா என்பது குறித்து நாளை தெரிவிக்கப்படும்.
- இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் கமிட்டியை (தமிழக அரசு நியமித்தது) மாற்றி அமைப்போம். மாநில அரசு மற்றும் வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இதுகுறித்து அறிவிக்கப்படும்.
- பணியில் இருக்கும் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.