திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக மனு
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. உயர்நீதிமன்றத்தில் வரலாறு காணாத வன்முறை நிகழ்ந்துள்ளது. எனவே திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான ஜெயக்குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நலன் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.2.2009 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்து விட்டது.
போலீஸாரின் கொடூரமான தாக்குதலில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அப்பாவி பொதுமக்கள் எனப் பலரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையின் காரணமாக தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு, போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான பதற்றமான சூழல் நிலவுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான உத்தரவும் காவல்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும்.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து பணியிலுள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
சட்டம், ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ள தமிழகத்தில் அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி தமிழக அரசைக் கலைக்க வேண்டும்.
அதற்கான அறிக்கைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, ஆட்சியைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.